வெறும் பயணக் கதை அல்ல; கம்யூனிஸ இயக்கத்தின் பிரசவ வலி – சு.பொ.அகத்தியலிங்கம்
“1923 ல் கான்பூரில் நடைபெற்ற சதிவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக் கைதியாக ஒவ்வொரு நாளும் 15 மைல்கள் என் காலில் பூட்டப்பட்ட விலங்குகளை இழுத்துக் கொண்டே செல்லும்படி நடத்தியே கூட்டிச் சென்ற போதும்கூட எனக்கு அத்துன்பங்கள் எல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை.” என்கிறார் தோழர் செளகத் உஸ்மானி. கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பின்னப்பட்ட கான்பூர், மற்றும் மீரட் சதிவழக்குகளில் 16 ஆண்டுகாலம் சிறைத்தண்டனையை அனுபவித்தவர் இவர்.
செளகத் உஸ்மானி போன்ற இளைஞர்கள் தேசவிடுதலைக் கனவை நெஞ்சில் சுமந்து கொண்டு மலைதாண்டி, நதி தாண்டி நடந்த ஓர் சாகசப் பயணம் – விடுதலைப் போருக்கு உதவி கோரி மீண்டும் ஓர் பயணம் – தோழமை நாட்டின் வெற்றியைக் கண்டுகளிக்க மூன்றாவது பயணம் என மூன்று முறை சோவியத் யூனியனுக்கு பயணித்ததை சொல்லும் பயணநூலே “ஒரு புரட்சியாளனின் பயணங்கள்.” இந்நூல் வாழ்க்கை வரலாறல்ல ; ஆயின் அவர் வாழ்வின் முக்கிய கட்டங்களைச் சொல்லும்.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் கிளை சோவியத் நாட்டில் தாஷ்கண்டில் 1920 அக்டோபர் 17 ஆம் நாள் உதயமானது. அதன் நூற்றாண்டைக் கொண்டாடி முடித்திருக்கிறோம்.
யாரோ நாலு பேர் சொகுசாக விமானம் ஏறிப்போய் தாஷ்கண்டில் உடகார்ந்து உருவாக்கிய கிளை என நினைத்துவிடாதீர்கள். அந்தக் கிளையின் பிரசவவலியை பலர் அறியமாட்டோம். ஆவணங்களில் இருந்து சில தகவல்களை மட்டுமே அறிந்திருப்போம். அந்த வலியை அங்குலம் அங்குலமாக அறிந்த செளகத் உஸ்மானி அவர் வார்த்தைகளில் அதைச் சொல்லுகிறார். முதல் பகுதி அந்த சாகசப் பயணத்தின் கதைதான்.
மெளலா பக்ஸ் உஸ்தா என்ற இயற்பெயர் கொண்ட செளகத் உஸ்மானி இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிக்கானீர் நகரில் ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்தவர்.
1920 ஆம் ஆண்டு ஆப்கன் அமீர் அமானுல்லாகான் அழைப்பை ஏற்று ஆப்கன் சென்று ஹிஜ்ரத் இயக்கத்தில் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராட ஏராளமான இளைஞர்கள் கால்நடையாகவே புறப்பட்டனர். ஒன்றல்ல இரண்டல்ல 36 ஆயிரம் பேர். அவர்கள் நடந்தே கடந்த தூரம் சுமார் முன்னூறு மைல்கள், அதில் செளகத் உஸ்மானியும் ஒருவர்.
பனிக்காற்றிலும் மழையிலும் போதுமான உணவின்றி இந்திய விடுதலை என்கிற ஒற்றை லட்சியமே உந்துவிசையாக நடந்தனர். சோவியத் வெற்றியும் சாதனைகளும் ஒரு பகுதி இளைஞர்களை ஈர்த்தது. துருக்கில் பிரிட்டிஷாரால் அநியாயமாக பதவி நீக்கப்பட்ட காலிப்பை மீண்டும் அப்பதவியில் உடகார வைக்க வேண்டும் என்கிற உந்துதலும் கிலாபத் இயக்கமாக இதில் இருந்தது.
பயணம் புறப்படுகிறபோது எந்த இளைஞரும் கம்யூனிஸ்டாக வேண்டும் மார்க்சியம் கற்க வேண்டும் எனும் வேட்கையோடு புறப்படவில்லை. ஆனால் இந்திய விடுதலைப் போரில் தலைமை தாங்கிய மிதவாதத் தலைமையின் போக்கில் நம்பிக்கை அற்ற இளைஞர்களுக்கு செஞ்சேனையின் வீரம் ஈர்த்தது. அவர்கள் இந்தப் பயணத்தில் இணைந்து நின்றனர்.
ஆப்கானிலிருந்து சோவியத் எல்லையிலுள்ள திர்மிஷ் எனும் இடம் வரை கால்நடை, ஒட்டகம், படகு என பயணித்த சாகச அனுபவம் ஒரு வகை. ஓரிடத்தில் உஸ்மானி எழுதுகிறார்;
“அந்த இடத்தை நோக்கி நாங்கள் இறங்கிச் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. வழுக்கு பாறையில் கவனமாகச் செல்ல வேண்டும். இவ்வாறு அந்தப் பாதையில் ஒரு டஜன் மைல் நடந்து வந்தபின் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உண்டாக்கும் செய்தி எங்களுக்காகக் காத்திருந்தது. ஆம். நாங்கள் பாதை மாறி வந்து விட்டோம்.” இப்படி பல உண்டு. பெருக்கெடுத்து ஓடும் ஆற்றைத் தாண்டுவது, வெயிலைத் தாங்க முடியாமல் இரவு மட்டும் பயணிப்பது.. அந்த வலியை என்னென்பது?
சோவியத் யூனியனில் திர்மிஷ் நகரில் உற்சாகமாக கம்யூனிஸ்டுகள் வரவேற்றாலும் அதன் பின்னரும் பயணம் எளிதாகவில்லை. சோவியத் யூனியனைச் சூழ்ந்திருந்த எதிர்புரட்சிக்காரர்களிடம் சிக்கி பட்ட வேதனை கொடுமையானது.
அதனை செளகத் உஸ்மானி வார்த்தையில் பார்ப்போம்,
“என்ன வாழ்க்கை இது! ராஜஸ்தானில் ஒட்டகங்கள் அல்லது குதிரைகள் இரண்டைப் பிணைத்திருப்பதுபோன்று கால்களில் சங்கிலிகளால் நாங்கள் பிணைக்கப்பட்டிருந்தோம். கைகளிலும் விலங்கிடப்பட்டிருந்தோம். ஒரு தடித்த வளையம் எங்கள் கழுத்தைச் சுற்றி மாட்டப்பட்டது. அது எங்களைப் பிணைத்திருந்த சங்கிலியுடன் கோர்க்கப்பட்டது .இரவு நேரங்களில் எங்களின் கால்களில் பிணைக்கப்பட்ட சங்கிலிகள் நீக்கப்பட்டன. ஆயினும் ஒருவரின் ஒரு காலோடு மற்றொருவரின் கால் பிணைக்கப்பட்டது. தூங்குவதற்கும் சிரமப்பட்டோம்.”
இந்தப் பயணக்குழுவினர் எல்லோரும் ஒரே போன்ற நோக்கத்தோடு இல்லை.இதனால் பிளவு, கருத்து வேறுபாடு, சிக்கல் எல்லாம் சந்தித்தனர்.
செளகத் உஸ்மானி சொல்கிறார், “ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும்? 36 பேரும் [ஏனையோர் அவரவர் வழியில் சென்றுவிட்டனர்] அவியலான கூட்டத்தினர். எங்கள் போர்த்திறனும் உண்மையில் பெரிய அளவிற்குப் பரிட்சித்துப்பார்த்த ஒன்றுமல்ல. எனினும் எங்களுக்கு வேறு எந்த வழியும் கிடையாது. ஒன்று, போரிட்டுச் சாக வேண்டும். அல்லது எங்கள் கண்முன்னாலேயே நகரம் சூறையாடப்படும். நாங்கள் பிற்போக்குவாதிகளின் கையில் வீழ வேண்டும். அதன் மூலம் ஓர் இழிவான கோழைத்தனமான மரணத்தை எதிர்கொள்ள வேண்டும்.”
இறுதியில் கெர்கி புரட்சிக் குழுவுடன் இணைந்து போரிட்ட அனுபவத்தை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகமலே சோவியத்தை காக்கும் சர்வதேசக் கடமையைச் செய்த தோழர்களை அவர் தியாகத்தை உஸ்மானி எழுத்தில் படிக்கும்போதே ரெட் சல்யூட் அடிக்கத் தோன்றுகிறது.
எதிர்புரட்சியை முறியடித்து தாஷ்கண்ட் செல்வது, மாஸ்கோ மற்றும் தாஷ்கண்ட் ராணுவப் பள்ளியில் பயில்வது, கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை உருவாவது என முதல் பாகம் சாகசமும் பிரமிப்புமாய் விரிந்துள்ளது சோவியத் யூனியன் சென்றவர்கள் பெரும்பாலோர் இஸ்லாமியராய் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த முதல் கிளை ஆரம்பிக்கப்பட்டபோது, “நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சுமார் ஆறுமாதம் இணையாமல் இருந்தேன். இதற்கான காரணம் எளிது. எனக்கு மார்க்சியம் என்றால் என்ன என்றே தெரியாது. என்னுடைய பிரதானக் குறிக்கோள் ஒரு ராணுவ வீரனைப் போல் சண்டையிட வேண்டும் என்பது மட்டுமே ஆகும். இந்தியாவை விடுவிப்பதற்கான போராளியாய் இருக்க விரும்பினேன். அவ்வளவுதான்.” என்கிறார் செளகத் உஸ்மானி.
இந்திய விடுதலை மீதும் இந்தியர்கள் மீதும் சோவியத் மக்களின் நல்லெண்ணமும் நட்பார்ந்த பார்வையும் அங்கு சோவியத் தேசம் முழுவதும் விரவிக் கிடப்பதை பலவேறு சம்பவங்களூடே நிறுவிச் செல்கிறார்.
காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்தது, உடல் நலிவுற்று சிங்கார வேலர் வீட்டில் ஓய்வெடுத்தது, பல்வேறு புரட்சிகர இளைஞர் குழுக்கள், காங்கிரஸ் தலைவர்களோடு உரையாடியது, தொடர்பு கொண்டது எனத் தொடங்குகிறது இரண்டாம் பாகம்.
1928 ஜூலையில் மாஸ்கோவில் நடந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது காங்கிரசில் சிக்கந்தர் சூர் என்கிற புனைப் பெயரில் செளகத் உஷ்மானி பங்கேற்றது, ஸ்டாலினுடன் தலைமைக்குழுவாக மேடையில் அமர்ந்தது என பல அரிய தகவல்களின் தொகுப்பாய் நீள்கிறது இரண்டாம் பாகம்.
இந்திய புரட்சிகர இளைஞர்களின் ஈர்ப்பாக சோவியத் யூனியன் இருந்ததும், நேரு, தாகூர் உட்பட பலர் சோவியத் நாட்டை வியந்து பாராட்டியதையும், எதிர்புரட்சியை மீறி சாதனை படைக்க உதவிய ஐந்தாண்டு திட்டங்கள் குறித்தும் நிறைய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
லெனினும் சரி, ஸ்டாலினும் சரி இந்திய விடுதலையை விரும்பினர், அதற்குத் தார்மீக ஆதரவைத் தெரிவித்தனர், மார்க்சிய பயிற்சி அளிக்க முன்வந்தனர் ஆனால் ஒரு போதும் தனிநபர் சாகசத்தை பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்றும், தற்போது முக்கியமானது தேசியவிடுதலைப் போர்தான் சோஷலிசத்துக்கான போர் அல்ல ஆகவே தேசிய முதலாளித்துவ சக்திகளையும் இணைந்தே விடுதலைக்குப் போராட வேண்டும் என்றும் உறுதியாகக் கூறியதாக செளகத் உஸ்மானி எழுத்தினூடே அறிய முடிகிறது.
செளகத் உஸ்மானி எழுதுகிறார், “தனிப்பட்ட வன்முறைத் தாக்குதல்களைத் தவிர்ப்பது குறித்தும், மக்களைப் பெரும்திரள் போராட்டங்களுக்குத் தயாரிப்பது குறித்தும் புரட்சியாளர்களிடம் அறிவுறுத்தும்படி நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். கம்யூனிஸ்ட் அகிலம் தனிப்பட்ட வன்முறைத் தாக்குதல்களை ஊக்குவிக்கவில்லை என என்னிடம் சொல்லப்பட்டது.”
இந்த அத்தியாயத்தைப் படித்தபின் பல கேள்விகள் எழும். முதல் கிளை துவங்குவதில் முன் நின்ற எம். என் ராய் ஏன் பின்னர் முரண்பட்டார்? எதில் முரண்பட்டார் ? முதல் கிளையில் உறுப்பினராக இருந்த அனைவரும் பின் என்ன ஆனார்கள்? தாஷ்கண்ட் பெஷவார் சதிவழக்குகள், கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு விவரங்கள் என்ன? இப்படி பலவற்றை தேடிப் படிக்க வேண்டிய – அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தை இளம் கம்யூனிஸ்டுகளுக்கு இந்நூல் ஏற்படுத்திவிட்டது
மூன்றாம் பாகம், 1974 ல் செளகத் உஸ்மானி சோவியத் நாடு சென்று கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு இடைவெளியில் ஏற்பட்ட பிரமாண்டமான வளர்ச்சியை மாறுதலைக் கண்டு வியந்து விவரிக்கிறார்.
“நான் முதன் முதலில் சோவியத் யூனியன் சென்ற போது இருந்த நிலைமைகளுடன், இன்றைய [1974] மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ள, வளமான சோவியத் யூனியனை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.”
ஏராளமான தகவல்கள், புள்ளிவிபரங்கள், நேரில் கண்ட காட்சி சித்தரிப்பு மூலம் சோவியத்தின் பாய்ச்சல் வேக வளர்ச்சியை சுட்டுகிறார் உஸ்மானி.
சமய சகிப்புத்தன்மை குறித்து நேரில் கண்டதை முஸ்லீம்கள் தொழுகைக்குப் போவதை சுட்டிக்காட்டுகிறார். ஓர் இடத்தில், ரஷ்யர் அல்லாத நண்பர் என்னிடம் கூறினார் என்கிற பீடிகையுடன் நண்பர் கூற்றாகச் சொல்கிறார், “மாஸ்கோவில் உள்ள தேவாலயம் வரலாற்றில் எப்போதும் போலவே இப்போதும் திறந்திருக்கின்றன. ஆனால், மக்கள் அங்கு சென்று வழிபடாவிட்டால் அது சோவியத் அரசின் குற்றமல்ல.”
சோவியத்தில் மக்கள் நல்லபடி வாழ்ந்ததை இந்நூலில் படித்து முடித்தபின், அந்த சோவியத் ஏன் சிதைந்தது என்பதை அறியும் ஆவலும் இயல்பாக ஏற்படத்தானே செய்யும்.
கம்யூனிசம் இங்கு விதைக்கப்பட்டதின் பின்னாலுள்ள மகத்தான தியாகத்தின் ஆழமும் வலியும் லட்சிய வேரும் நம் கண்களைக் குளமாக்கும். தூக்கத்தை மறந்து அசைபோட வைக்கும். இந்த தியாகத்தை உள்வாங்கி நாளை கம்யூனிச லட்சியத்தை முன்னெடுக்க விழையும் ஒவ்வொரு இளைஞரும் படிக்க வேண்டிய நூல் இது ஐயமில்லை. இந்நூலை வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும், தமிழில் நன்கு மொழிபெயர்த்த தோழர்கள் ச.வீரமணி, தஞ்சை ரமேஷ் ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.
l