போ கல்வி பெறு
புத்தகத்தை கையில் எடு..
அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது
அனைத்தும் மாறிவிடும்.. வாசிப்பே விடுதலை
– சாவித்ரி பாய் பூலே
சென்னை புத்தக கண்காட்சி வந்துவிட்டது. வாசிப்புத் திருவிழா வாகை சூட.. அறிவுச் சுடர், ஒளிவிட்டு பிரகாசிக்க நாம் எல்லா சாலைகளையும் புத்தகக் காட்சி அரங்கை நோக்கி செலுத்த வேண்டும். ‘புத்தக வாசிப்பே’ சமூக விடுதலையின் அடையாளம்’ என்கிறார் அமர்தியாசென். ‘புத்தகம் காலத்தின் விதை நெல்’ என்று பாரதிதாசன் சொன்னாரே. மகள் பிரியதர்சினிக்கு அல்மோரா சிறையில் இருந்து கடிதம் எழுதுகிறார் நேரு. ‘தனி மனித அனுபவம் மிகக் குறுகியது.. ஒரு மலை உச்சியில் நின்று உலகையே திக்கெட்டும் காணும் அனுபவம் பெற புத்தகங்களை வாசிக்க வேண்டும்’ என்று எழுதுகிறார். நமது தேசியக் கவி பாரதியார் தன்னிடமிருந்த சொர்ப்ப பணம் யாவற்றையும் தமிழ் நூல்களை வாங்கிட செலவு செய்து வாசிப்பை விருத்தி செய்’ என வரலாற்றில் வழிகாட்டினார்.
1976முதல் தென்இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பு இந்த அறிவு யாகத்தை பிரமாண்ட ஞானத்திருவிழாவை நடத்தி வருகிறது. ஜனவரி 4ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கப் போவது 48வது சென்னை புத்தக கண்காட்சி ஆகும். கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பிரமாண்ட புத்தக திருவிழா இதுவே. மொத்தம் 700 புத்தக அரங்குகள். இம்முறை 100 இலக்கிய நிகழ்ச்சிகள்.. பத்து லட்சம் பேரை வரவைப்பது இலக்கு. ஆசியாவின் ஆறாவது பெரிய புத்தகத் திருவிழா நமது சென்னை புத்தக கண்காட்சி ஆகும். புத்தக வாசிப்பு எனும் சமுதாய முன்னேற்ற படிநிலை பிரமாண்ட வேலையாக நம் முன்நிற்கிறது. இன்றைய முதிய தலைமுறை தொலைகாட்சி மற்றும் ஊடக சிறைபட்டு சிதைந்து வருகிறது.
வருங்காலத்தை வென்றெடுக்க வேண்டிய இளைய தலைமுறையோ சினிமா கவர்ச்சியிலும் மின் அனு கருவிகளிடத்தும் தன்னை இழக்கும் பலகீனத்தோடு பரிதவிக்கிறது. மதவெறி அரசியலுக்கு தமிழகத்தை பலியிட்டு ரத்த ஆறுகளின் மூலம் ஆட்சியை வென்றெடுக்க மத்திய அதிகார கட்டமைப்பு ஏராளமான உத்திகளுடன் சதி, சூது மற்றும் நச்சுத் திட்டங்களுடன் கார்பரேட்டுகளோடு கைகோர்த்து மண்ணின் இயற்கை வளங்களை சூறையாட சுற்றி வளைக்கிறார்கள். இந்தப் பொங்கல் காஜா புயல் சூறையாடிய நமது டெல்டா மக்களுக்கு துயரப் பொங்கலாகவே தொடர்கிறது. அவசர உதவி மட்டுமல்ல, புயல் நிவாரணம் புனரமைப்பு என ஒரு சுண்டு விரலை அசைக்கக்கூட மத்திய கார்பரேட் ஆதரவு காவி அரசு விரும்பவில்லை…
நமது தற்போதைய ஒரே ஆறுதல் ஞானமும் கல்வியும் நயந்திட ஒன்று கூடும் சென்னை புத்தக கண்காட்சியின் புத்தகப் பொங்கலே ஆகும். இந்த வாசிப்பு பொங்கல் கோயில்களைவிட புத்தக சாலைகளே புனிதமானவை’ என அறிவித்தாரே வீரத் துறவி விவேகானந்தர். ‘அடுமனையில் உணவு’ சமைத்தலுக்கு கூட விடுப்பு தருவேன் எனது அறிவு மனையின் வாசிப்பு வேலை ஒருபோதும் தடை போட மாட்டேன்’ என்று ஆயிரக்கணக்கான நூல்களோடு வாழ்ந்தாரே நம் தமிழக விடிவெள்ளி மருத்துவ புரட்சி பெண் முத்துலட்சுமி ரெட்டி.. பொங்கலின் சுவையை வாசிப்பாய் சமைத்து தமிழ் மண்ணை கரையேற்ற உறுதி ஏற்போம்.
எல்லா சாலைகளும் ‘வாசிப்பே விடுதலை’ என முழங்கட்டும். நந்தனம் YMCA மைதானத்தை நோக்கி…. ஜனவரி ஜனங்கள் யாவரையும் அலை அலையாய் திருப்புவோம். அனைவருக்கும் நன்றி.
– ஆசிரியர் குழு.