மீண்டெழும் மறுவாசிப்புகள்-5 : கர்ணனின் மனைவி
ச. சுப்பாராவ்
அவள் பெயர் உருவி. புகேய நாட்டு மன்னர் வகுஷனுக்கும், அரசி சுப்ராவிற்கும் மகளாகப் பிறந்தவள். குரு வம்சத்திற்கு நேச நாடான புகேய நாட்டு இளவரசி அஸ்தினாபுரத்தில் அனைவருக்கும் செல்லக் குழந்தை. குந்தி Ôஎன் மருமகளே’ என்றுதான் அவளை அழைப்பாள். குரு வம்சத்து இளவரசர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் குருகுலம் முடிந்து தங்கள் திறமைகளை வெளிக்காட்டும் அந்த நிகழ்ச்சிக்கு தன் தாய் தந்தையருடன் வரும் உருவி, அர்ச்சுனனுக்கு சவால் விட்டு, அங்கதேசத்து மன்னனாகிவிடும் கர்ணன் மீது காதல் கொள்கிறாள். தந்தை தனக்கு ஏற்பாடு செய்யும் சுயம்வரத்தில், கர்ணனுக்கு மாலை சூட்டி உலகத்தையே அதிர்ச்சியடையச் செய்கிறாள். உயர்வர்ணப் பெண் கீழ்வர்ண ஆணைத் திருமணம் செய்வது தகுமா என்று கேள்வி கேட்பவர்களின் வாயை பிராமணப் பெண்ணான தேவயானி க்ஷத்ரியனான யயாதியை மணக்கவில்லையா என்று எதிர்கேள்வி கேட்டு அடைக்கிறாள். அவள் திருமண நாளிலிருந்து, கர்ணன் மரணிக்கும் நாள் வரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கேட்கும் கேள்விகளாக அந்த நாவல் விரிவடைகிறது. கவிதா கானே எழுதிய தி கர்ணாஸ் வைஃப் (tலீமீ ரிணீக்ஷீஸீணீ’s ஷ்வீயீமீ;) என்ற நாவல் சமீபத்திய மறுவாசிப்பு நாவல்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.
நாவல் வியப்பூட்டும் தகவல்களோடும், உரையாடல்களோடும் நகர்ந்து செல்கிறது. சிறுவயது முதல் அஸ்தினாபுரத்தில் நடக்கும் அனைத்து
விசேஷங்களுக்கும் தாய்தந்தையரோடு வரும் உருவி, சிறுமியாக இருக்கும் போதே, காந்தாரியைப் பார்த்து, நீங்கள் ஏன் கண்களைக் கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் கண்களோடு இருந்தால்தானே கணவருக்கு நல்லபடியாக உதவ முடியும் என்று கேட்கிறாள். கர்ணனுக்கு ஏற்கனவே விருஷாலி என்று சூத இனத்தைச் சேர்ந்த ஒரு மனைவி இருக்கிறாள். அவளுக்கு சுதாமா, ஷத்ருஞ்சயன், த்விபாதன், சுஷேணன், சத்யசேனன், சித்ரசேனன் என்று ஏகப்பட்ட குழந்தைகள். இதில், பாஞ்சாலியின் சுயம்வரத்தில் நடந்த போராட்டத்தில், மூத்த மகன் சுதாமா இறந்து விடுகிறான். துரியோதனனின் மனைவி பானுமதி, காம்போஜ நாட்டு இளவரசி. முதலில் அவளது அக்காவைத்தான் துரியோதனனுக்கு மணம் செய்து வைக்கிறார்கள். அவள் சில நாட்களிலேயே இறந்துவிட, துரோணரின் ஆலோசனையின் பேரில் அவளது தங்கை பானுமதி இரண்டாம்தாரமாக மணமுடிக்கப் படுகிறாள் என்று நாவல் முழுவதும் ஏராளமான புதுப்புதுத் தகவல்கள்.
கர்ணனை மணமுடித்து வந்த உருவி மெல்ல மெல்ல அஸ்தினாபுரத்தின் அரசியல் நிகழ்வுகளை அறிவதும், அதில் பங்கேற்பதுமாக நாவல் செல்கிறது. வனத்தில் தன் இரு மனைவிகளோடும், ஐந்து குழந்தைகளோடும் வாழும் பாண்டுவின் மரணம் ரிஷியின் சாபத்தால் அல்ல, சகுனியின் சதியால், அவனது ஒற்றர்களால் பாண்டுவும், மாத்ரியும் கொல்லப் பட்டிருக்கலாம் என்று நினைக்கிறாள் உருவி. ஏனெனில், அக்காலத்தில் ஆரியதேசத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் கிடையாது. தருமன் பாரதத்தின் அனைத்து அரசர்களையும் வென்று ராஜசூய யாகம் செய்து கொள்ள முடிவு செய்யும் போது, தருமனை சக்ரவர்த்தியாக ஏற்க முடியாது என்று வெளிப்படையாக துரியோதனன் ஏன் அறிவிக்கவில்லை என்று கர்ணனிடம் சண்டை போடுகிறாள் உருவி. அப்போதே நேரடியாகப் போர்க்களத்தில் மோதி இருக்கலாம் அல்லவா? அதற்குத் தயாராக இல்லாத துரியோதனனும், கர்ணனும் கோழைகள் தான் என்று வெளிப்படையாகச் சொல்கிறாள். பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் கட்டியுள்ள மாளிகைக்கு ராஜசூய யாகத்தில் கலந்துகொள்ள கணவனோடு செல்கிறாள் உருவி. அந்த மாளிகையின் அழகில் மற்றவர்களைப் போல் அவள் மயங்கவில்லை. தான் வாழப் போகும் மாளிகையை ஒரு அருங்காட்சியகம் போல் கட்டவேண்டிய அவசியம் இல்லை என்கிறாள்.
சூதாட்டம், பாஞ்சாலி துகிலுறிதல் சம்பவங்களின் போது கர்ப்பவதியாக இருக்கும் உருவி பெரும் ஆவேசம் கொள்கிறாள். துகிலுறியத் தூண்டியது தன் கணவன் என்று அறிந்ததும், தன் தாய்வீடு செல்ல முடிவு செய்கிறாள். என்னிடம் எந்த விளக்கமும் இல்லை. என் செயலை என்னால் நியாயப் படுத்த முடியவில்லை என்று மன்னிப்புக் கேட்டு நிற்கும் கர்ணனிடம், உன் வாழ்க்கை முழுவதுமே ஒரு பொய். நீ முழுக்க முழுக்க நாடகமாடி இருக்கிறாய். உனக்கு உன் கீழ்ஜாதிப் பிறப்பு, அதனால் ஏற்பட்ட அவமதிப்புகள் ஆகியவற்றை சரிசெய்து கொண்டு சமூக அங்கீகாரம் பெறுவது மட்டும்தான் வாழ்வின் ஒரே நோக்கம். நீ வாரி வாரி தானம் வழங்குவதற்கும் அதுதான் காரணம். சமூக அங்கீகாரத்திற்காக நல்லவன் போல் நீ போடும் வேஷம் இப்போது திரௌபதி துகிலுரிந்த விஷயத்தில் கலைந்து விட்டது என்று கடுமையாகத் திட்டிவிட்டு தன் தாய் வீடு சென்றுவிடுகிறாள். ஆனால் தருமன் சூதாடியதையும் அவளால் ஏற்க முடியவில்லை. அவனது மனைவி, தம்பிகளை எதுவும் செய்யட்டும். ஆனால் ஒரு மன்னன் என்பவன், மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க வேண்டியவன் அல்லவா? மன்னனுக்கு நாட்டையும், மக்களையும் சூதாட்டத்தில் பணயம் வைக்கும் உரிமை உண்டா? என்று ஒரு சட்டச் சிக்கலை எழுப்புகிறாள். தாய்வீடு கிளம்பும் போது Ôஅப்படியானால் நீ என்னை காதலிக்கவில்லையா?’ என்கிறான் கர்ணன் கண்கலங்க. இப்போதும் காதலிக்கவே செய்கிறேன். ஆனால், அந்தக் காதலோடு இதுவரை உன் மேல் ஒருவித மரியாதை இருந்தது. இப்போது அந்த மரியாதை போய்விட்டது, என்கிறாள் அவள். குழந்தை பிறந்து, பெரியவர்கள் பலரும் புத்திமதி சொல்லியதால், வெகுகாலம் கழித்து, மீண்டும் கணவனோடு சேர்ந்து வாழ அங்கதேசம் வருகிறாள் அவள்.
பாரதப் போரின் போது, கர்ணனுக்கும், பீஷ்மருக்கும் பிரச்னை வரும்போது, பாண்டவர்கள் பாண்டுவின் வாரிசுகளாக இல்லாத போது, அவர்களை ஏற்ற நீங்கள், கர்ணனை மட்டும் சூதபுத்திரன் என்று வாய்க்கு வாய் நீங்கள் சொல்வது சரிதானா? என்று பீஷ்மரை எதிர்த்துக் கேள்வி கேட்கிறாள் உருவி. கர்ணனின் பிறப்பு ரகசியத்தைச் சொல்லி, பாண்டவர் பக்கம் சேருமாறு குந்தி அழைப்பு விடுக்கும் போது, குழந்தை பிறக்காது, வேறு வழியில் குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்து கொள்வோம் என்று மன்னர் பாண்டு கூறியபோது. பத்தினி போல் ஏன் நடித்தீர்கள்? ஏற்கனவே, ஒரு குழந்தை எனக்கு பிறந்துள்ளது என்ற உண்மையை அவரிடம் சொல்லியிருந்தால், வாரிசுக்காக ஏங்கிய மன்னர் பாண்டு, கர்ணனை அன்றே தம் புத்திரனாக ஏற்றிருப்பாரே! இன்று இத்தனை பிரச்னை ஏற்பட்டிருக்காதே! என்று குந்தியைத் திட்டி அழ வைக்கிறாள் உருவி. கர்ணன் மடிந்துபட்டதும் அவள் சொல்வது மிக முக்கியமானது. கர்ணன் ஆறுமுறை இறந்துவிட்டான். அவனது தாய் அவனை கங்கையில் விட்டபோது முதன்முறையாக. இரண்டாவது முறை பரசுராமன் சபித்தபோது. மூன்றாவது முறை இந்திரன் திருட்டுத்தனமாக கவச குண்டலத்தைக் கவர்ந்த போது. நான்காவது முறை குந்தி அவனிடம் வரம் வாங்கியபோது. ஐந்தாம் முறை சகதியில் சிக்கிய தேரை நகர்த்த சல்லியன் மறுத்த போது. ஆறாம் முறை அர்ச்சுனனின் அம்புகள் அந்த நிராயுதபாணியைத் தாக்கியபோது. எல்லாம் முடிந்து, எல்லாம் தெரிந்த போது வருந்தும் பாண்டவர்கள் மூத்தவரின் வாரிசு என்ற வகையில் கர்ணனுக்கும், உருவிக்கும் பிறந்த விருக்ஷ்கேதுவை அஸ்தினாபுரத்தின் அரசனாக்கலாம் என்கிறார்கள். இந்த பாரதக் கதை மீண்டும் ஒரு சுற்றுக்கு நடக்கும். எனவே அதெல்லாம் வேண்டாம். என் மகன் எங்களது புகேய நாட்டுக்கு அரசனாக இருப்பான். அவன் என்றும் உங்கள் குரு வம்சத்தின் வாரிசு அல்ல என்று பாண்டவர்களைக் கடிந்து விரட்டி விடுகிறாள் உருவி.
பொதுவாக, மறுவாசிப்பு என்பது பெரும் இதிகாசத்தில் ஒரு மூலையில் லேசாகக் குறிப்பிடப்படும் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதன் மூலம் ஆசிரியர் சொல்ல நினைத்த விஷயங்களைச் சொல்வது என்ற வகையில் அமையும். இந்த நாவலின் சிறப்பு உருவி என்ற கற்பனைப் பாத்திரத்தை முன்னிருத்தி, அதன் வழியாக மஹாபாரதத்தின் அத்தனை பிரதான பாத்திரங்களையும் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் வகையில் கேள்வி கேட்பதுதான். பாரதத்தில் விருஷாலி பற்றி மட்டுமே குறிப்பு உண்டு. உருவி என்பது, முழுக்க முழுக்க கற்பனையான பாத்திரம். அதை வைத்து இத்தனை கேள்வி கேட்ட கவிதா கானே மிகமிக பாராட்டுக்குரியவர். மஹாபாரதத்தில் பெண்கள் தான் நிறைய கேள்விகளை எழுப்ப முடியும், எழுப்ப வேண்டும் என்று எனக்கு உணர்த்துகிறார் கவிதா கானே.